இஸ்ரவேல் கோசேனில் குடியேறுதல்

1. யோசேப்பு பார்வோனிடம் சென்று, “எனது தந்தையும் சகோதரர்களும் அவர்களின் குடும்பமும் வந்துள்ளது. அவர்கள் தங்கள் மிருகங்களையும், பொருட்களையும் கொண்டுவந்துள்ளனர். அவர்கள் இப்போது கோசேன் பகுதியில் உள்ளனர்” என்றான்.

2. யோசேப்பு தம் சகோதரர்களில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து அழைத்துச் சென்று பார்வோன் முன் நிறுத்தினான்.

3. பார்வோன் அவர்களிடம், “நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்டான். அவர்கள், “ஐயா, நாங்கள் மேய்ப்பர்கள். எங்கள் முற்பிதாக்களும் மேய்ப்பர்கள்” என்றனர்.

4. மேலும், “கானான் நாட்டில் பஞ்சம் அதிகம். எங்கள் மிருகங்களுக்கு அங்கே புல் மிகுந்த வயல் எதுவுமே இல்லை. எனவே, இங்கே வாழ்வதற்காக வந்துள்ளோம். கோசேனில் வாழ அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றனர்.

5. பார்வோன் யோசேப்பிடம், “உனது தந்தையும் சகோதரர்களும் உன்னிடம் வந்திருக்கிறார்கள்.

6. எனவே, நீ எந்த இடத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அவர்களுக்கு நல்ல நிலத்தைக் கொடு. அவர்கள் வேண்டுமானால் கோசேனிலேயே வாழட்டும். அவர்கள் திறமையுள்ள மேய்ப்பர்கள் என்றால் எனது ஆடுமாடுகளையும் பார்த்துக்கொள்ளலாம்” என்றான்.

7. யோசேப்பு தன் தந்தையை பார்வோனைப் பார்ப்பதற்காக அழைத்தான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்.

8. பார்வோன் அவனிடம், “உங்களுக்கு எத்தனை வயதாகிறது?” என்று கேட்டான்.

9. “ஏராளமான துன்பங்களோடு மிகக் குறுகிய காலமே வாழ்ந்திருக்கிறேன். என் வயது 130 ஆண்டுகளே. எனது தந்தையும் அவருடைய முற்பிதாக்களும் என்னைவிட அதிகக் காலம் வாழ்திருக்கிறார்கள்” என்றான்.

10. யாக்கோபு பார்வோனை வாழ்த்தி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

11. பார்வோன் சொன்னதுபோலவே யோசேப்பு தந்தைக்கும் சகோதரர்களுக்கும் நல்ல நிலத்தை கோசேனில் கொடுத்தான். இது எகிப்திலேயே சிறந்த இடம். இது ராமசேஸ் நகரத்துக்கு அருகில் உள்ளது.

12. யோசேப்பு தன் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் குடும்பத்துக்கும் வேண்டிய உணவுப் பொருட்களையும் கொடுத்தான்.

யோசேப்பு பார்வோனுக்காக நிலம் வாங்குதல்

13. பஞ்சம் மிகவும் மோசமாகியது. பூமியில் எங்கும் உணவு இல்லை. எகிப்தும் கானானும் இக்காலத்தில் மிகவும் மோசமாகியது.

14. ஜனங்கள் நிறைய தானியங்களை விலைக்கு வாங்கினார்கள். யோசேப்பு அச்செல்வத்தைச் சேர்த்து வைத்து பார்வோனின் வீட்டிற்குக் கொண்டு வந்தான்.

15. கொஞ்ச காலத்தில் எகிப்திலும் கானானிலும் உள்ள ஜனங்களிடம் தானியம் வாங்கப் பணம் இல்லை. தம்மிடம் இருந்த பணத்தை ஏற்கெனவே தானியம் வாங்குவதில் செலவழித்திருந்தார்கள். எனவே அவர்கள் யோசேப்பிடம் சென்று, “தயவு செய்து தானியம் கொடுங்கள். எங்கள் பணம் தீர்ந்துவிட்டது. நாங்கள் உணவு உண்ணாவிட்டால் உங்கள் முன்னாலேயே மரித்துவிடுவோம்” என்று வேண்டினார்கள்.

16. ஆனால் யோசேப்போ, “உங்கள் ஆடு மாடுகளைக் கொடுங்கள் உணவு தருகிறேன்” என்றான்.

17. எனவே ஜனங்கள் தங்கள் ஆடு மாடுகளையும் குதிரைகளையும் மற்ற மிருகங்களையும் உணவுக்காக விற்றனர். யோசேப்பு அவற்றை வாங்கிக்கொண்டு உணவைக் கொடுத்தான்.

18. ஆனால் அடுத்த ஆண்டு அவர்களிடம் விற்க மிருகங்களும் இல்லை. எனவே, யோசேப்பிடம் ஜனங்கள் போய், “எங்களிடம் உணவு வாங்கப் பணம் இல்லை. எங்களது மிருகங்களோ உங்களிடம் உள்ளது. எங்களிடம் எதுவும் இல்லை. எங்கள் சரீரமும், நிலங்களும் மட்டுமே உள்ளது.

19. நீங்கள் பார்க்கும்போதே நாங்கள் மரித்துவிடுவோம். ஆனால் நீங்கள் உணவு கொடுத்தால் பார்வோன் மன்னருக்கு எங்கள் நிலங்களைக் கொடுப்போம். நாங்கள் அவரது அடிமைகளாக இருப்போம். விதை கொடுங்கள் விதைக்கிறோம். பிறகு நாங்கள் மரிக்காமல் உயிர் வாழ்வோம். நிலத்தில் மீண்டும் உணவு விளையும்” என்றனர்.

20. எனவே, யோசேப்பு எகிப்தில் உள்ள எல்லா நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிவிட்டான். அனைவரும் தங்கள் நிலங்களை யோசேப்பிடம் விற்றுவிட்டார்கள், அவர்கள் பசியாய் இருந்ததால் இவ்வாறு செய்தார்கள்.

21. எகிப்திலே, எல்லோரும் பார்வோன் மன்னனின் அடிமைகள் ஆனார்கள்.

22. ஆசாரியர்களுக்கு உரிய நிலத்தை மட்டுமே யோசேப்பு வாங்கவில்லை. அவர்களின் உணவுக்கு ஆசாரியர்கள் தங்கள் நிலத்தை விற்கவேண்டிய தேவை ஏற்படவில்லை. ஏனெனில் மன்னன் தேவையானவற்றைச் சம்பளமாகக் கொடுத்து வந்தான். அதையே உணவு வாங்க வைத்துக்கொண்டனர்.

23. யோசேப்பு ஜனங்களிடம், “இப்போது நான் உங்கள் நிலத்தையும் உங்களையும் பார்வோனுக்காக வாங்கிவிட்டேன். எனவே விதை கொடுக்கிறேன். நீங்கள் அந்நிலங்களில் பயிர் செய்யுங்கள்.

24. அறுவடைக் காலத்தில், நீங்கள் ஐந்தில் ஒரு பாகம் எங்களுக்குக் கொடுக்க வேண்டும். ஐந்தில் நான்கு பாகம் நீங்கள் வைத்துக்கொள்ளலாம். அதில் விதை வைத்திருந்து அடுத்த ஆண்டுக்குப் பயன்படுத்தலாம். இப்போது உங்கள் குழந்தைகளுக்கும் குடும்பத்துக்கும் உணவு கொடுக்கலாம்” என்றான்.

25. ஜனங்களோ, “எங்கள் உயிரைக் காப்பாற்றினீர்கள். நாங்கள் பார்வோனுக்கு அடிமையாக இருப்பதில் மகிழ்கிறோம்” என்றனர்.

26. எனவே, யோசேப்பு அப்போது ஒரு சட்டத்தை இயற்றினான். அது இன்றும் உள்ளது. அதன்படி நில வருவாயில் ஐந்தில் ஒரு பாகமானது பார்வோனுக்குரியது. பார்வோனுக்கு எல்லா நிலமும் சொந்தமாக இருக்கும். ஆசாரியர்களின் நிலம் மட்டுமே, பார்வோனுக்குச் சொந்தமாகவில்லை.

தன் மரணம் பற்றி யாக்கோபின் அறிவிப்பு

27. இஸ்ரவேல் (யாக்கோபு) எகிப்தில் கோசேன் பகுதியில் வாழ்ந்தான். அவனது குடும்பம் வளர்ந்து மிகப் பெரியதாகி அப்பகுதியில் நன்றாக வாழ்ந்தனர்.

28. யாக்கோபு எகிப்தில் 17 ஆண்டுகள் வாழ்ந்தான். எனவே அவனுக்கு 147 வயது ஆனது.

29. தான் விரைவில் மரித்துப் போவேன் என்று இஸ்ரவேலுக்குத் (யாக்கோபு) தெரிந்தது. அவன் யோசேப்பை அழைத்து அவனிடம்: “நீ என்னை நேசித்தால், உன் கையை என் தொடையின் கீழ் வைத்து ஒரு வாக்குறுதியைச் செய். நான் சொல்வதை நீ செய்யவேண்டும். எனக்கு உண்மையாக இருக்கவேண்டும். நான் மரித்தால் என்னை எகிப்தில் அடக்கம் செய்யவேண்டாம்.

30. எனது முற்பிதாக்களை அடக்கம் செய்த இடத்திலேயே என்னையும் அடக்கம் செய்துவிடு. இங்கிருந்து கொண்டுபோய் நமது குடும்பக் கல்லறையில் என்னை அடக்கம் செய்” என்றான். யோசேப்பு, “நீர் சொன்னபடியே நான் செய்வேன் என்று வாக்குறுதி செய்கிறேன்” என்றான்.

31. பிறகு யாக்கோபு, “எனக்கு வாக்கு கொடு” என்று கேட்டான். யோசேப்பும் அவ்வாறே வாக்குறுதி அளித்தான். பின் இஸ்ரவேல் (யாக்கோபு) படுக்கையில் தன் தலையைச் சாய்த்தான்.

ஆதியாகமம் அதிகாரங்கள்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50

(Visited 7 times, 1 visits today)