பெருமையின் பலன்

தனது 26 ஆவது வயதில் நெப்போலியன் போனபார்ட் (Nepolean Bonaparte) இத்தாலியிலுள்ள பிரஞ்ச் இராணுவத்தின் தளபதியானார். 1804ல் அவர் 35 வயதாவதற்குள், பிரஞ்ச் நாட்டின் அரசனானார். பிரஞ்ச் அதிபர்களுக்கும், கத்தோலிக்க போப்களுக்கும் இடையில், கசப்பான உறவுமுறை இருந்த போதிலும், பிரான்ஸின் அரசாங்க மதமாக கத்தோலிக்க மதமே இருந்து வந்தது.

பிரான்ஸ் நாட்டின் முதல் மன்னனாக நெப்போலியன் முடிசூட்டி கொள்வதற்காக போப்பையும் அழைத்திருந்தான். முடிசூட்டும் விழா Notre Dam என்னும் இடத்திலுள்ள பெரிய கதீட்ரலில் (Cathedral) 1804-ல் டிசம்பர் மாதம் 2ம் தேதி நடைபெற்றது. அந்நாளில், போப்பும், அவருடன் கார்டினல்களும், மேலே ஆல்டர் இருக்கும் இடத்தில் காத்திருக்க, நெப்போலியன் தன் மனைவி ஜோஸப்பினின் கைகளைப் பிடித்தபடி நடந்து மேலே ஏறினான்.

அனைவர் கண்களும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, இப்போது போப்பின் முன் முழங்கால் படியிடுவான் என அனைவரும் எதிர்ப்பார்த்திருக்க, மேலே ஏறிப் போன நெப்போலியன், போப்பின் கையிலிருந்த கிரீடத்தை பிடுங்கி, ஆல்டர் இருக்கும் இடத்திற்கு தன் முதுகை காட்டியவாறு, அந்தக் கிரீடத்தை தானே தன் தலையில் வைத்துக் கொண்டான். என்ன ஒரு ஆணவம்! மட்டுமல்ல, தன் மனைவியையும் மகாராணியாக, அவனே முடிசூட்டினான்.

அவனுடைய ராஜ்ஜியம், ஐரோப்பா கண்டம் முழுவதும், போர்ச்சுகல், ஆஸ்ட்ரியா, ஸ்வீடன், ரஷ்யா மற்றும் இங்கிலாந்தைத் தவிர எல்லாஇடமும் பரவியிருந்தது.

ஆனால் முடிசூட்டி 10 வருடங்களுக்குள்ளாக, நெப்பொலியன், வாட்டர் லூ (Waterloo) என்னும் இடத்தில் நடைபெற்ற யுத்தத்தில் (Battle of Waterloo) 1815-ம் வருடத்தில், நெல்சன் என்பவரிடம் தோல்வியைத் தழுவினான். அப்போது அவன் சிறைபிடிக்கப்பட்டு, St. Helena என்னும், எரிமலை இருக்கும் தீவில் கைதியாக அடைக்கப்பட்டான். பாவம் என்ன ஒரு பரிதாபம்? ‘உலகத்தின் மூலையிலுள்ள இந்த தீவின் சின்ன பாறையில் நான் உட்கார்ந்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?’ என்று அங்கு புலம்பிக் கொண்டே, 1821 ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி, ஆறு வருடங்கள் அங்கு கூண்டிலடைக்கப்பட்ட கழுகைப் போல வாழந்து, புலம்பியபடியே தன் 52 ஆவது வயதில் உயிரைத் துறந்தான். உலகத்தையே ஜெயித்த மனிதனுக்கு ஏற்பட்ட நிலைமை! என்ன ஒரு பரிதாபமான முடிவு!

வேதம் சொல்கிறது, அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும் என்று. ஒரு தேவ பயமில்லாதபடி, தனக்கு தானே முடிசூட்டிக் கொண்டு அழைக்கப்பட்ட போப்பையும் அவமானப்படுத்தி, தன்னை தானே உயர்த்திய நெப்பொலியன் தாழ்த்தப்பட்டுப் போனான். மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான். – (நீதிமொழிகள் 29:23).

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மத்தேயு 16:26). உலகமுழுவதையும் வென்று விட வேண்டும் என்பதே நெப்பொலியனின் இலட்சியமாக இருந்தது. ஆனால் தன் ஜீவனை நஷ்டப்படத்தி நித்தியநித்திய காலம் நரகத்தில் வாழ்ந்து, வேதனை அனுபவிப்பது எத்தனை பரிதாபமான நிலை?

எந்த ஒரு பெருமையோ, ஆணவமோ நம்மில் ஒருவரிடமும் காணப்பட வேண்டாம். தேவன் அப்படிப்பட்டவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார். நம்மை நாமே தாழ்த்துவோம். கர்த்தரிடம் கிருபையைப் பெற்றுக் கொள்வோம். நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரை, தாழ்மையுள்ள இருதயத்தோடு தொழுதுக் கொள்வோம், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். ஆமென் அல்லேலூயா!

தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்

மத்தேயு. 23:12

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 3 times, 1 visits today)