இயேசு நம்மோடு என்றும்

பட்டணத்தில் வசிக்கும் பெண் ஒருத்தி தன் போதகரிடம் வந்து, நான் எப்படி ஆடையணிய வேண்டும் என்று கேட்டாள். அதற்கு அவர் ‘உன் சுடிதார் இவ்வளவு நீளம் இருக்க வேண்டும், உன் சட்டையின் கழுத்து இவ்வளவு குறைவாக இருக்க வேண்டுமென்று சொல்ல நான் ஒரு டெய்லர் இல்லை, நான் ஒரு ஊழியன். ஆகவே நீ எப்படி ஆடையணிய வேண்டுமென்று கூறுகிறேன் என்றால், உன் வீட்டிற்கு அடுத்த தெருவில் இயேசு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என வைத்து கொள். ஒரு நாள் இயேசு உனக்கு போன் பண்ணி என்னுடைய வீட்டிற்கு வா என்று சொல்கிறார். நாம் இருவரும் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்கிறார். அவருடன் செல்ல நீ எவ்வித ஆடையணிவாயோ அது போலவே ஒவ்வொரு நாளும் ஆடையணி’ என்றார். அதை தொடர்ந்து அவர் கூறியதாவது,

‘நீங்கள் எப்படிப்பட்ட ஆடையணிந்து இயேசுவை பார்க்க முடியுமோ அப்படிப்பட்ட ஆடையே அணியுங்கள். இயேசுவோடு நடக்கும்போது இப்படிப்பட்ட ஆடையை அணியக்கூடாது என்று உங்கள் மனச்சாட்சி உறுத்துமென்றால் அப்படிப்பட்டதை அணிய வேண்டாம். சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா? மகளே, நீ சபைக்கு போகும்போது தகுதியாக ஆடை அணிந்து கொள், வேலைக்கு போகும்போது நீ விரும்பியபடி ஆடை அணி என்கின்றனர். இதற்கு என்ன பொருள்? வேலைக்கு போகும்போது இயேசு உன்னுடன் வருவாரா என்பதை பற்றி எல்லாம் கவலையில்லை என்பதுதானே! வேலைக்கு போகும்போது இயேசு உன்னுடன் வர வேண்டாமா?’ என கூறினார்.

இந்த டிவி நிகழ்ச்சியை பார்க்கலாமா? என எண்ணும்போது, அருகாமையிலே இயேசு உட்கார்ந்திருக்கிறார் என எண்ணி கொள்ளுங்கள். இயேசு உங்களோடு அமர்ந்து பார்க்க கூடியவற்றையே பாருங்கள். இயேசுவோடு சேர்ந்து எவ்வித நிகழ்ச்சியை பார்க்க முடியுமோ அதை பாருங்கள். உங்களுக்கு தெரியுமா? நம் வாழ்வின் அநேக காரியங்களை இயேசு இல்லாமலே தனியாகத்தான் செய்கிறோம்.

சபையிலுள்ள ஒரு சகோதரர் உங்களை சந்திக்கும்படி உங்கள் வீட்டிற்கு வருவாரென்றால், அவருக்கு முனபாக உங்கள் கணவரோடோ, மனைவியோடோ நீங்கள் சண்டை போடுவீர்களா? இல்லை, அவர் போன உடன் சண்டை போட ஆரம்பித்து விடுகிறோம். ஏன்? கர்த்தர் நம்மோடு கூட இருக்கிறார் என்கிற எண்ணம் இல்லாததினாலேயே!

என்னோடு கூட சேர்ந்து இயேசு இந்த புத்தகத்தை வாசிக்காவிட்டால் என்னால் இந்த புத்தகத்தை வாசிக்க முடியாது. இயேசு உங்களோடு வாசிக்க முடியுமென்றால் அது அசுத்தமான புத்தகமாக இருக்காது. உங்கள் ஆத்துமாவிற்கு நன்மை பயக்க கூடியதாகவே இருக்கும்.

என்னோடு கூட சேர்ந்து இயேசுவும் இந்த கம்ப்யூட்ரில் வரும் காரியங்களை பார்க்க முடியாவிட்டால் அதை நான் பார்க்க மாட்டேன் என மனதில் உறுதி எடுக்க வேண்டும். நான் வேலை செய்யும் இடத்திலே இயேசு என்னோடு இருக்கிறார் என்ற எண்ணத்தோடு செயல்படுவோமானால், நாம் பேசுகிற தேவையற்ற வார்த்தைகளும், நாம் யாரும் பார்க்கவில்லை என்ற எண்ணத்தோடு செய்கிற காரியங்களும் இல்லாமற் போகும்.

பிரியமானவர்களே, ஒவ்வொன்றையும் இயேசு நம்மோடு கூட இருக்கிறார் என்கிற எண்ணத்தோடு செய்தால், நிச்சயமாக நாம் தவறானதை செய்ய துணிய மாட்டோம். அவர் நம்மோடு இருக்கிறார், நாம் செய்வதை காண்கிறார், எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் என்கிற எண்ணம் நமக்குள் எப்போதும் இருக்குமானால், நம்முடைய சிந்தனை, செயல்கள் எல்லாமே மாறிவிடும். தேவ சிந்தனையாய் மாறிவிடும். அதுப்போன்ற பழக்கத்தை நாம் நமக்குள் ஏற்படுத்தி கொள்வோம், அது நம்மை நன்மைக்கேதுவாக நடத்தும், ஆமென் அல்லேலூயா

நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு (ஆதியாகமம் 17:1)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 37 times, 1 visits today)