முழங்காலின் ஜெபம் 

ஒரு மிஷனெரி நிறுவனமானது மிஷனெரி ஒருவரை குறிப்பிட்ட பட்டணத்திற்கு ஊழியம் செய்ய அனுப்பியது. உற்சாகமாக சென்ற அவர் அப்பட்டணத்தை சுற்றி பார்த்தார். ஓரிரு நாட்களில் ஊழியத்தை ஆரம்பித்தார். மாதங்கள் பல உருண்டோடின. எவரும் இவரது போதனைக்கு செவிசாய்க்கவில்லை. மக்கள் மிகவும் முரட்டாட்டம் மிக்கவர்களாய் மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தனர். தினமும் இடைவிடாமல் ஊழியம் செய்தும் ஒரு சிலரை கூட மாற்ற முடியவில்லை. எனவே மிகவும் சோர்வுற்றவராக எனது எல்லா முயற்சியும் பயனற்று போய் விட்டதே என்று நினைத்தவராக பட்டணத்தின் இன்னொரு பகுதிக்கு வந்தார்.

அங்குள்ள சாலை அருகில் கல் உடைக்கும் ஒருவரை பார்த்தார். பெரிய பெரிய கற்களை அவர் சம்மட்டியால் உடைத்து கொண்டிருந்தார். ஊழியர் அவரிடம் சென்று, ‘ஐயா உங்களால் எப்படி இவ்வளவு பெரிய கடினமான பாறைகளை உடைக்க முடிகிறது?’ என்று கேட்டார். அதற்கு கல் உடைப்பவர், ‘ஐயா கடினமான பாறையை உடைக்கும்போது. முழங்காலில் நின்று உடைக்க வேண்டும். முழங்காலில் நிற்கும்போது, நமது வல்லமை அதிகரிக்கும். எப்படிப்பட்ட கடினமான பாறையையும் உடைத்து விடலாம்’ என்றார். அவர் மூலம் தேவன் தன்னோடு பேசுவதை ஊழியர் ஒரு நொடிப்பொழுதில் புரிந்து கொண்டார். உள்ளத்தில் உற்சாகமடைந்தவராக வீடு திரும்பினார். அன்றிலிருந்து பல மணி நேரம் முழங்காலில் நின்று ஜெபித்து வெற்றி பெற்றார்.

உண்மைதான், முழங்காலில் நிற்பதுதான் வெற்றியின் இரகசியம்! வேதத்திலே தானியேல், எலியா, பவுல், எஸ்தர் இவர்களெல்லாம் ஜெபித்து வெற்றி கண்டனர். நாமும் முழங்காலில் நின்று இருதயத்தை ஊற்றும்போது, மிகுந்த பெலனை பெற் முடியும். முழங்கால் ஜெபம் பல தடைகற்களை தகர்த்து வெற்றி பெற செய்யும்.

இதை வாசிக்கிற நீங்கள், உங்க்ள வாழ்வில் ஏற்பட்ட தொடர் தோல்வியை எண்ணி சோர்ந்து போயுள்ளீர்களா? எவ்வளவு முயற்சித்தும் எந்த மாற்றமும் இல்லையே என கண்ணீர் வடிக்கிறீர்களோ, உங்கள் முழங்கால்களை முடக்குங்கள். வெற்றிக்காக நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஜெயத்தை கட்டளையிடுகிறவர் நம் ஆண்டவர் மட்டுமே, ஆம் மூளையால் செய்ய முடியாததை முழங்கால்களால் சாதிக்க முடியும் என்றார் ஒரு பக்தன்.

பிரியமானவர்களே, உங்கள் வாலிப பிள்ளையின் மனம் போன போக்கு மாற வேண்டுமென்று பலரது ஆலோசனையை நாடுகிறவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு யோசனை, அந்தரங்கத்தில் பிதாவின் முகத்தை நோக்கி முழங்கால் படியிடுங்கள். உங்கள் கண்ணீருக்கு கண்டிப்பாய் பதிலுண்டு. கணவரோ மனைவியோ இரட்சிக்கப்படவில்லையே என்று மனம் நொந்து காணப்படுகிறீர்களோ, கர்த்தருடைய வாக்குதத்தத்தை பிடித்து கொண்டு அவரிடம் அந்தரங்கத்தில் மன்றாடுங்கள். கர்த்தர் நிச்சயமாய் பதிலளிப்பார்.

அன்பான ஊழியர்களே, நான் எவ்வளவு வருடம் ஊழியம் செய்கிறேன், ஆனால் ஒரு பலனும் இல்லை, இதுவரை நான் செய்த அனைத்துமே வீண் என்று புலம்புகிறீர்களா? கர்த்தருக்காக செய்யும் ஒரு சிறு காரியமும் வீணாவதில்லை என்பதை முழு நிச்சயமாய் நம்புங்கள். ஆனால் எதை செய்தாலும் முழங்காலில் நின்று செய்து பாருங்கள், நிச்சயம் அறுவைடையை காண்பீர்கள் ஆமென் அல்லேலூயா!

‘ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்’

(மாற்கு 11:24)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 5 times, 1 visits today)